உதயணன் சரித்திரச் சுருக்கம்
எழுதியவர்: உ.வே. சாமிநாதையர்
Uthayanan Charithra Churukkam By U. V. Swaminatha Iyer
Pages -191
கொங்கு நாட்டிலிருந்த வேளிர்களுள் ஒருவரான கொங்கு வேளிர் என்பரால் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தமிழில் அகவல் பாக்களால் இயற்றப் பெற்ற பெருங்கதை யென்னும் நூலின் கதைப்போக்கைத் தழுவி எழுதி அதற்கு அங்கமாக அதனோடு சேர்த்துப் பதிப்பிக்கப்பெற்ற இவ்வசன நூலைச் சில அன்பர்கள் விரும்பியபடி தனியாகவும் வெளியிடலாயிற்று.
குருகுலத்தில் பிறந்தவனும் கெளசாம்பி நகரத்து அரசனும் சதானிகனுடைய புதல்வனுமான உதயணன் என்பவன் பிறந்தது முதல் அவன் துறவு பூண்டமை இறுதியாகவுள்ள வரலாறுகள் இதன் பால் விரிவாகக் காணலாகும்.
பண்டைக்காலத்து அரசாட்சி முறையையும் நாடுகளின் அமைதிகளையும், நீதிகளையும், சிற்பம் முதலிய பலவகைக் கலைகளின் நுட்பங்களையும் இது காறும் அறியப்படாத இன்னும் எத்தனையோ அரிய பெரிய விஷயங்களையும் அறிந்து கொள்வதற்குத் தக்க கருவியாகும் இது.
இக்கதையின் சம்பந்தமாக வடமொழி முதலியவற்றில் இயற்றப்பட்டுள்ள நூல்கள் பல வழங்கப்படினும் குணாட்டியர் என்னும் மஹாகவியால் பைசாச பாஷையில் முதலில் இயற்றப் பெற்ற பிருஹத் கதையை முதல் நூலாகக்கொண்டு கங்கநாட்டு அரசனாகிய துர்நீதன் இயற்றியதாகத் தெரியவரும் ஒரு வடநூலே கொங்கு வேளிர் இயற்றிய பெருங்கதைக்கு முதல் நூலாக இருத்தல் வேண்டுமென்பது சில அறிஞர்கள் கருத்து.
இந்நூல் உஞ்சைக் காண்டம், இலாவாண காண்டம், மகத காண்டம், வத்தவ காண்டம், நரவாண காண்டம், துறவுக் காண்டம் என்னும் ஆறு பகுதிகளை உடையது. படிப்பவர்கள் மூலத்தின் இனிமையை ஒருவாறு அறிந்து இன்புறும்பொருட்டு முக்கியமான இடங்களில் சில சில மூலப்பகுதிகள் அங்கங்கே சேர்க்கப்பட்டுள்ளன.
கிடைத்த பெருங்கதைக் கையெழுத்துப் பிரதியில், மகத காண்டத்தின் முற்பகுதியும், நரவாண காண்டத்தின் பிற்பகுதியும், துறவுக் காண்டமும் இல்லாமையால் அந்தப் பகுதிகளுக்குரிய கதையை உதிதோதய காவ்யம் முதலிய வேறு நூல்களிலிருந்து அறிந்து எழுதி இது பூர்த்திசெய்யப் பெற்றது.
அரும்பதங்களுக்கு உரையும், அபிதான விளக்கமும் படிப்பவர்களுக்கு உபயோகமாக இருக்குமென்றெண்ணி இதன்பால் சேர்க்கப்பெற்றுள்ளன.
உதயணன் சரித்திரச் சுருக்கம் (பெருங்கதையைத் தழுவிய வசனம்): By U. V. Swaminatha Iyer (English Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site