எடையைக் கூட்டும் எழுத்து
“.... எப்போதோ ஒருமுறை பற்றிக் கொள்ளுகிற தான்சேனின் தீபங்கள், கிளியோபாத்ராவின் மார்பு மைதானத்தில் கைகுலுக்கிக் கொண்ட பாம்புகள், மாவீரன் அலெக்சாண்டருக்கு மண்டை ஓடுகள் நடத்திய மௌனமான பாடங்கள், லிவிங்ஸ்டனின் கதையில் வானத்தில் வடுக்களை விதைத்து விட்டுப்போன சீகல் பறவையின் சிலிர்ப்பு...”
வார்த்தைச் சித்தர் வலம்புரி ஜானின் கவிதையைப் பற்றிய இந்தக் கணிப்பு மறுபடி என் மனதிற்குள்வரக் காரணம் கவிஞர் துரை. நந்தகுமாரின் இந்தத் தொகுப்பு.
வாசிக்க முற்படுபவர்களை வயப்படுத்தி மகரந்த சேர்க்கைகளை மனதிற்குள் நடத்தி விடுகிற மழைத் தொகுப்பு இது!
கணக்கற்ற காதல் பூக்களை நட்டுவைத்து கவிதைத் தொகுப்பையே நந்தவனமாக்க நினைத்த நந்தகுமாரின் எழுத்து முயற்சி வரிக்கு வரி வாசமூட்டுகிறது.
ஆசையா... அவஸ்தையா... என்று புரிந்துகொள்ள முடி-யாத காதலை கற்பனையா... நிஜமா... என்று தெரிந்து-கொள்ள முடியாத வகையில் திறம்பட எழுதியிருக்கிறார் கவிஞர்.
மயில் வரைய
நீ ஏன் அமர்ந்திருக்கிறாய்
உன் புகைப்படத்திலிருந்து
ஒன்றை ஒட்டிவிடுவதுதானே
என்ற கவிதையை வாசிக்கும்போது,
“எந்த இடத்திலும் பாய்ந்து செல்லும் வெள¢ளம் கவிஞனின் உள்ளம் அவனது கவிதைகளில் ஏன்...? எப்படி...? என்ற கேள்விகள் எழுமானால் கேள்வியை எழுப்பியவர்கள்தான் பதில் சொல்ல வேண்டுமே தவிர, அது கவிஞன் வேலையல்ல...” என்று கண்ணதாசன் சொன்னதுதான் கவனத்திற்கு வருகிறது.
தவிர்த்திருக்கலாம்
ஒன்றோ இரண்டோ
போதாதா
புடவை முழுக்க
பூக்கள் ஏன்...?
எடை தாங்குவாளா
அவள்
என்பன போன்ற கவிதைகள் எடையைக் கூட்டிவிடு-கின்றன தமிழுக்கும்!
பூவோடு இலைகள்
பார்த்திருக்கிறேன்
இதென்ன புத்தகம்?
கல்லூரி செல்லும் நீ!
என்ற கவிதை நம்மை கைகுலுக்க வைக்கிறது கவிஞரிடம்.
“கல்லூரி சென்ற நம் காதலியை வர்ணிக்க இப்படி ஒரு கற்பனை எப்படி வராமல் போனது நமக்குள்?” என்று நந்தகுமாரிடம் கவிஞர்களை பொறாமை கொள்ள வைக்கிற கவிதை இது!
“அவசர யுகத்திலும் அமைதியின் மடியில் சயனம் கொண்டு ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய மானுடத்தின் தெய்வதம் காணும் மந்திரமே கவிதை” என்ற ஜெய-காந்தனின் சிந்தனைக்கு வலுசேர்க்கிற கவிதைகள் நிறைய உள்ளன தொகுப்பில்.
விழிகளில் துளிர்த்த காதலை விரலுக்குள் கொண்டுவந்து கவிதைகளாய் மாற்றி அதை காகிதங்களில் பதிந்திருக்கிற கவிஞர் துரை.நந்தகுமார் சமூக அவலங்களையும் பாடி சாதிப்பார் என்கிற நம்பிக்கை எனக்குள் வளர்கிறது.
தொடர்ந்து எழுதப்போகிற துரை.நந்தகுமாரால் இன்னும் தன்னை மேம்படுத்த முடியும் என்று நிஜமாய் நம்மை நம்பவைக்கிற தொகுப்பு “நீ.”
திகைப்பூட்டும் கற்பனை
தித்திப்பூட்டும் நடை
எழிலூட்டும் வார்த்தை
எளிமையூட்டும் வடிவம்
என்றிருக்கும் இந்தத் தொகுப்பு மகிழ்ச்சியூட்டும். வாசியுங்கள்!
நிறைய அன்புடன்
நெல்லை ஜெயந்தா.
நீ… (Tamil Edition)
Sobre
Baixar eBook Link atualizado em 2017Talvez você seja redirecionado para outro site